கம்பம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி
தேனி:
கம்பம் பழைய செக் போஸ்ட் பின்புறம் வசித்து வந்தவர் அருண்குமார் மனைவி மீனா (வயது 24). சம்பவத்தன்று ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் மீனா படுகாயமடைந்தார்.
கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் சரசு கொடுத்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சிவா (25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் அவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே உள்ள ஜமீன் தோப்பு தெருவைச் சேர்ந்த நல்லகாமு மகன் செல்வம் (39). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று தேனி மெயின் ரோட்டில் காளியம்மன் கோவில் அருகே தோப்பில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இது குறித்து போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.