செய்திகள்
தற்கொலை

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் சுய உதவிக்குழு பெண் தற்கொலை

Published On 2019-11-14 12:32 GMT   |   Update On 2019-11-14 12:32 GMT
நாகர்கோவிலில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சுய உதவிக்குழு பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 34).

இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். அந்த குழுவில் இருந்து அவர் கடன் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவர் அவதிப்பட்டார். சுய உதவிக்குழு நிர்வாகிகளும் வாங்கிய பணத்தை திருப்பிக்கட்டும் படி கேட்டு வந்தனர்.

இதனால் முருகேஸ்வரி மனவேதனை அடைந்தார். நேற்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முருகேஸ்வரியின் பிணத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளச்சல் செம்பொன் விளை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மகன் அனீஸ் (வயது 26). இவர் ஏற்கனவே 2 முறை வெளிநாட்டு வேலைக்கு சென்றிருந்தார். அங்கு சரியான வேலை அமையாததால் ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் வெளிநாடு செல்ல முடியாத மனவருத்தத்தில் இருந்த அவர் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அனீஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News