கோவை மதுக்கரையில் ராணுவ அதிகாரி வீட்டில் நகை திருட்டு
கோவை:
கோவை மாவட்டம் மதுக்கரையைச் சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 39). ராணுவ அதிகாரி. இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு மனைவியுடன் கேரளா சென்றார். பின்னர் வீடு திரும்பினர். அப்போது அவரது மனைவி வீட்டில் இருந்த 4 பவுன் தங்க வளையல்களை எடுப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தார்.
அதில் இருந்த தங்க வளையல்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் மதுசூதனனிடம் கூறினார். மதுசூதனனுக்கு வீட்டில் வேலை செய்து வந்த கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சியா (வயது 39) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து மதுக்கரை போலீசில் மதுசூதனன் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் பீடம் பள்ளியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (47). சம்பவத் தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 5½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மகாலிங்கம் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.