செய்திகள்
தப்பி ஓட்டம்

மாதவரத்தில் கஞ்சா வழக்கில் பிடிபட்ட பெண் தப்பி ஓட்டம்

Published On 2019-11-13 07:32 GMT   |   Update On 2019-11-13 07:32 GMT
மாதவரத்தில் கஞ்சா வழக்கில் பிடிபட்ட பெண் தப்பி ஓடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

செங்குன்றம்:

செங்குன்றம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக புழல் போலீஸ் உதவி கமி‌ஷனர் ரவிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து செங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கிய ராஜ் தலைமையில் பஸ் நிலையத்தில் கண்காணித்த போது 2 பேர் கஞ்சா விற்றது தெரிய வந்தது.

வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ், மாதவரம் பால் பண்ணையைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 150 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரம் கம்பர் நகர் தாமரை தெருவில் வசித்து வரும் ரம்யா என்ற பெண்ணிடம் கஞ்சா வாங்கியது தெரிய வந்தது. கஞ்சா வழக்கில் சிறையில் உள்ள அஜித் குமாரின் மனைவிதான் ரம்யா என போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 1½ கிலோ கஞ்சா சிக்கியது. ரம்யாவை போலீசார் விசாரணை செய்து மாதவரம் அருள் நகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து விட்டனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் காப்பகத்தில் இருந்த ரம்யா நைசாக தப்பி சென்று விட்டார். போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பதாக சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

காப்பகத்தில் இருந்து கஞ்சா பெண் ரம்யா தப்பி சென்ற தகவல் மாதவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ரம்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

செங்குன்றம் போலீசாரிடம் சிக்கிய ரம்யாவை ஏன் கைது செய்யவில்லை. காப்பகத்தில் தங்க வைத்தது ஏன்? என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News