செய்திகள்
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதல்: 9-ம் வகுப்பு மாணவன் பலி
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சின்னமல்லபாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). கூலித் தொழிலாளியான இவரது மகன் அருண்குமார் (14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரையும், அதேபகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்னை - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுப்பிரமணி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பர்கூர் சந்திப்பு அருகே சென்றபோது எதிரேவந்த மற்றொறு பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த அருண்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சுப்பிரமணி, சிவக்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.