ராஜபாளையம் அருகே வயலுக்குச்சென்ற விவசாயி மர்ம மரணம்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள ஆர்.ரெட்டியபட்டியைச் சேர்ந்த விவசாயி வைரவன் (வயது42). இவர் கோபாலபுரத்தில் உள்ள வயலை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
வயலில் அகத்திக்கீரையும் சாகுபடி செய்துள்ளார். அகத்திக்கீரையை பறித்து விற்பனைக்கு அனுப்புவார். வழக்கம்போல் அகத்திக்கீரை பறிப்புக்காக நேற்று காலை வைரவன் வயலுக்குச் சென்றார்.
வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சஞ்சீவி அம்மாள் மற்றும் உறவினர்கள் வயலுக்குச் சென்றனர். அங்கு வைரவன் வாய், காதில் ரத்தம் ஒழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கீழராஜகுல ராமன் போலீசில் சஞ்சீவி அம்மாள் புகார் செய்தார். அதில், தனது கணவரின் சாவில் மர்மம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகா லிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று வைரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைரவனின் மர்ம மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.