செய்திகள்
திருட்டு

நித்திரவிளை அருகே வீடு புகுந்து ரூ.88 ஆயிரம் திருட்டு

Published On 2019-11-06 17:45 GMT   |   Update On 2019-11-06 17:45 GMT
நித்திரவிளை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் வீடு புகுந்து ரூ.88 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.
நாகர்கோவில்:

நித்திரவிளை அருகே உள்ள சின்னதுறையை சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி பீனா (வயது 25). கடந்த 3-ந்தேதி பீனா இரவிபுத்தன்துறையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது தனது கைப்பையில் அவர் ரூ.88 ஆயிரத்து 600-ஐ எடுத்துச் சென்றிருந்தார்.

பணப்பையை அவர் தாய் வீட்டு அலமாரியில் துணிகளுக்கு நடுவே வைத்திருந்தார். 4-ந்தேதி இரவு வீட்டின் பின் கதவை பூட்டிவிட்டு முன் கதவை காற்றுக்காக திறந்துவைத்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் தூங்கச் சென்றுவிட்டனர். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பீனா, பணம் வைத்த அலமாரிக்கு சென்று பார்த்தார். அங்கு இருந்த ரூ.88 ஆயிரத்து 600 திருடப்பட்டு இருந்தது.

இரவு கதவு திறந்து கிடந்ததை நோட்டமிட்ட யாரோ வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிக் கொண்டு பின்பக்க கதவை திறந்து கொண்டு தப்பிச் சென்று உள்ளனர். இந்த துணிகர திருட்டுப்பற்றி நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் மோகன் ஜோஸ்வின், சிறப்பு-சப்-இன்ஸ்பெக்டர் விஜயதாஸ் மற்றும் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வீடு புகுந்து ரூ.88 ஆயிரத்து 600-ஐ திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News