செய்திகள்
சிறுவன் பலி

விருதுநகர் அருகே மழைநீர் தொட்டிக்குள் மூழ்கி 3 வயது சிறுவன் பலி

Published On 2019-10-30 07:55 GMT   |   Update On 2019-10-30 07:55 GMT
விருதுநகர் அருகே மழைநீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வச்சகாரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி நேத்ரா தேவி. இவர்களுக்கு 3 வயதில் ருத்ரன் என்ற மகன் உள்ளான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள தாத்தா மணிகண்டன் வீட்டுக்கு ருத்ரன் சென்றான். மணிகண்டன் தனது வீட்டு முன் மழை நீர் சேகரிப்புக்காக 6 அடி தொட்டியை அமைத்திருந்தார். அந்த தொட்டி மூடப்படாமல் திறந்து கிடந்தது.

இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக மழைநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பியது.

இன்று காலை மழை சற்று ஓய்ந்த நேரத்தில் சிறுவன் ருத்ரன் வீட்டின் வெளியே விளையாடியதாக தெரிகிறது. அப்போது தண்ணீர் நிரம்பியிருந்த மழைநீர் தொட்டிக்குள் ருத்ரன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.

இதை பார்த்த அப்பகுதியினர் உடனே தண்ணீரில் மூழ்கிய ருத்ரனை மீட்டனர். மூர்ச்சையாகி கிடந்த சிறுவன் கன்னிச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ருத்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வச்சகாரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மழைநீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் சுஜித் தவறி விழுந்து இறந்த துயரம் மறையும் முன் விருதுநகரில் ருத்ரன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News