திருவண்ணாமலை வனத்துறை விடுதியில் பெண் வன அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலை:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன மூஞ்சூர் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் லாவண்யாதேவி (வயது24). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் வனத்துறையில் வேலை கிடைத்தது.
கோவையில் பயிற்சியில் சேர்ந்த லாவண்யாதேவி பயிற்சி முடித்து கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
சின்னகடை தெருவில் உள்ள வனத்துறை விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக லாவண்யாதேவி விரக்தியில் மனமுடைந்து யாருடனும் பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களாக லாவண்யாதேவியின் விடுதி அறை திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக லாவண்யாதேவியின் அறையை பார்த்தனர். அப்போது அவர் மின் விசிறியில் பிணமாக தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் நரசிம்மன் விரைந்து வந்து லாவண்யாதேவியின் பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.