செய்திகள்
லாஸ்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு- வாலிபர் கைது
லாஸ்பேட்டையில் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை மெயின் ரோடு கொட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகிலேயே எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணன் தனது கடை முன்பு மோட்டார் சைக்கிகளை நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த சக்திவேல் (21) என்பவர் அடிக்கடி மோட்டார் சைக்கிளை நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதனை நாராயணன் கண்டித்து திட்டியதாக தெரிகிறது.
இதனால் நாராயணன் மீது சக்திவேல் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நாராயணன் தனது வீட்டு வாசலில் 2 மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது நள்ளிரவு 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். எனினும் 2 மோட்டார் சைக்கிகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ. 4 1/2 லட்சமாகும்.
இதுகுறித்து நாராயணன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் விசாரணை நடத்தினார். விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை எரித்தது சக்திவேல் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.