செய்திகள்
தற்கொலை

தேர்வில் தோல்வி - கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2019-10-17 09:17 GMT   |   Update On 2019-10-17 09:17 GMT
தாராபுரத்தில் தேர்வில் தோல்வியடைந்த கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிட்டுசாமி. இவரது மகன் சூர்யா (வயது 22). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சில பாடங்களில் சூர்யாவுக்கு அரியர் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அரியர் தேர்வு எழுதினார். அதிலும் தோல்வியடைந்தார். இதனால் விரக்தியடைந்த சூர்யா சம்பவத்தன்று அலங்கியம் ரோடு அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள சங்கிலி கருப்பணன் கோவில் பகுதிக்கு சென்றார். அங்கு வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். பின்னர் இது குறித்து தனது தாய்க்கு போன் செய்து தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் ஏசுதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News