செய்திகள்
மீட்பு

நித்திரவிளையில் மாயமான 4 மாணவர்கள் மீட்பு

Published On 2019-10-17 09:01 GMT   |   Update On 2019-10-17 09:01 GMT
நித்திரவிளையில் மாயமான 4 மாணவர்களை மீட்ட போலீசார் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்:

நித்திரவிளை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சாம்பரம், கலிங்கராஜபுரம், நித்திரவிளை பகுதியை சேர்ந்த 4 மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அவர்களை தேடினார்கள். பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். ஆனால் மாணவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் நித்திரவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாயமான மாணவர்களை தேடிவந்தனர். மாணவர்கள் மாயமானது குறித்து குமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் 4 பள்ளி மாணவர்கள் சுற்றித்திரிவதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சுற்றித்திரிந்த மாணவர்கள் 4 பேரையும் மீட்டனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் நித்திரவிளை பகுதியில் இருந்து மாயமான மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து மாணவர்களை மீட்டனர். பின்னர் 4 மாணவர்களையும் நித்திரவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாணவர்கள் மீட்கப்பட்டது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

விசாரணைக்கு பிறகு 4 மாணவர்களையும் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இன்று காலையில் மாணவர்கள் பெற்றோருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.

Tags:    

Similar News