வட்டார போக்குவரத்து அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் கேட்டு மிரட்டல் - 2 பேர் கைது
திருவள்ளூர்:
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலராக ஜெயபாஸ்கரன் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார். உங்கள் மீது புகார்கள் வந்துள்ளன. ரூ.50 ஆயிரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டோம் பின்னர் இது பற்றி பேசுவோம்’ என்று தெரிவித்து இணைப்பை துண்டித்துவிட்டனர்.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து மிரட்டியது தாம்பரம் கஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் மற்றும் அவரது நண்பர் ஜனார்த்தனன் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்ட இருவரும் இதேபோல் அரசு அதிகாரிகள் பலரை மிரட்டி இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.