திண்டிவனம் பகுதியில் பறக்கும் படையினர் விடிய, விடிய வாகன சோதனை
திண்டிவனம்:
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பறக்கும் படையினரும் பணம் கடத்துவதை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திண்டிவனத்தில் உள்ள முக்கிய சாலையான சேலம், சென்னை, புதுச்சேரி, வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய நெடுஞ்சாலைகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு திண்டிவனம் - மரக்காணம் சாலையில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் தலைமை காவலர்கள் அய்யனார், காளிதாஸ் மற்றும் திருஞான சம்பந்தம் ஆகியோர் இருசக்கர வாகனங்கள், கார், கனரக வாகனங்கள், பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனை விடிய, விடிய நடைபெற்றது.