செய்திகள்
தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆட்டு மந்தை தெருவை சேர்ந்தவர் மனோகரன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சவுந்தரநாயகி (வயது 45). இந்த நிலையில் இவர் நேற்று தனது குழந்தைகளுடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து விட்டு இரவு வீடு திரும்பினார்.
தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஹெல்மெட் கொள்ளையன் சவுந்தரநாயகி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதில் சவுந்தரநாயகி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசில் சவுந்தரநாயகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.