காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் கொலை- பிரபல ரவுடி சோழன் கைது
சேதராப்பட்டு:
புதுவை காங்கிரஸ் பிரமுகர் காலாப்பட்டு ஜோசப் கொலையின் முக்கிய குற்றவாளியான காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கடந்த திங்கட்கிழமை வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஜோசப்பின் மகன் டேனியல் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் பிரபல ரவுடி சுகன், அப்துல்நசீர், புளியங்கொட்டை என்ற ரங்கராஜன் ஆகியோர் சரண் அடைந்தனர்.
அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சோழன் மற்றும் உறுவையாறை சேர்ந்த பிரபல ரவுடி ஆகியோர் உத்தரவின் பேரில் சந்திரசேகரை கொன்றதாக கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து லாஸ்பேட்டையில் பதுங்கி இருந்த ரவுடி சோழனை கைது செய்தனர். இவர் மீது தெஸ்தான் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. அடுத்ததாக உறுவையாறு ரவுடியை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கொலை நடந்தபோது மர்ம கார் ஒன்று அந்த பகுதியில் சுற்றித்திருந்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா மூலம் அந்த காரின் எண்ணை பார்த்து அடையாளத்தை கண்டுபிடித்தனர்.
கருவடிக்குப்பத்தை சேர்ந்த செந்தில் என்பவர் காரை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. கொலை நடந்ததற்கு பிறகு கொலையாளிகள் தப்புவதற்காக அந்த கார் உடன் சென்றுள்ளது.
ஆனால் கொலையாளிகள் காரில் ஏறாமல் மோட்டார் சைக்கிளிலிலேயே தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து செந்தில் கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.