செய்திகள்
ரிஷிவந்தியம் பகுதியில் மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்ததால் பரபரப்பு
ரிஷிவந்தியம் பகுதியில் பல்சர் மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்தது. அது யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரிஷிவந்தியம்:
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வானாபுரம் பகண்டை கூட்டு ரோடு பகுதியான சங்கராபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் பள்ளத்தில் விலை உயர்ந்த பல்சர் மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு ஏதும் இருக்குமோ? என அச்சத்தில் யாரும் அதனை நெருங்கவில்லை. தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன், ஏட்டு சந்தியாகு ஆகியோர் விரைந்தனர். மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார் அதனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சோதனை போட்டனர். அதில் பிஸ்கட் பாக்கெட், டிபன்பாக்ஸ், ஊதா நிற துணி ஆகியவை இருந்தது.
போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிள் பதிவு எண் மூலம் அது யாருடையது?, எதற்காக காட்டு பகுதியில் கிடந்தது?, தொழில் போட்டி காரணமான யாரையாவது கடத்தி வந்து மோட்டார் சைக்கிளை உருட்டி விட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.