செய்திகள்
தற்கொலை

திருக்கனூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை

Published On 2019-09-21 09:22 GMT   |   Update On 2019-09-21 09:22 GMT
திருக்கனூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது75). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோசலை. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இதற்கிடையே கடந்த 28 நாட்களுக்கு முன்பு கோசலை உடல்நலக்குறைவால் திடீரென இறந்து போனார். மனைவி இறந்ததால் சுப்புராயன் சோகத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோசலையின் 30-ம் நாள் துக்கநிகழச்சி நடக்க இருந்த நிலையில் மனைவி இறந்த சோகத்தை தாங்க முடியாமல் சுப்புராயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் சுப்புராயன் டவலால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News