செய்திகள்
விஷம்

கம்பம் அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2019-09-16 10:18 GMT   |   Update On 2019-09-16 10:18 GMT
கம்பம் அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேனி மாவட்டம் சின்ன ஓபுலாபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராமர் (வயது 25). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3 மாதத்திலேயே இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ராமர் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் உழவர் சந்தை அருகில் வசித்து வருபவர் சுப்புராஜ் (வயது 54). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் வி‌ஷம் குடித்து கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம் ஊர் பொது மயானம் நீரேற்றும் பம்ப ஹவுஸ் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கோகிலாபுரம் கிராம நிர்வாக அதிகாரி கவிதா உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.

Tags:    

Similar News