செய்திகள்
கொல்லங்கோடு அருகே தொழிலாளியிடம் பணம் பறிப்பு- 2 பேர் கைது
கொல்லங்கோடு அருகே கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
கொல்லங்கோடு நங்கையத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32) தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக ஊரம்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் சசிகுமாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சசிகுமாரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்து ரூ.700-ஐ பறித்தனர். இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது சூழால் பகுதியை சேர்ந்த ஜெயசிங் (47), அஜிஸ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.