செய்திகள்
ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் செல்லும் காட்சி.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 69 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2019-09-11 10:29 GMT   |   Update On 2019-09-11 10:29 GMT
ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 69 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம்:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபிணி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 90 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக 63 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று 2 அணைகளில் இருந்தும் நீர்திறப்பு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மாலையில் நீர்வரத்து 63 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து 69 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மெயின் அருவி, ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 7-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இன்று 35-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது. 

Tags:    

Similar News