கொடைக்கானல் அருகே மனைவியை மிரட்ட விஷம் குடித்தவர் பலி
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுபட்டியை சேர்ந்தவர் சிவராஜா (வயது48). இவரது மனைவி சித்ரா (42). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் சித்ரா கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். சிவராஜா பல முறை அழைத்தும் வரவில்லை.
சம்பவத்தன்று மனைவியிடம் சென்று நீ வீட்டிற்கு வராவிட்டால் நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி தான் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்
பின்னர் சிறிது நேரத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.