செய்திகள்
குழந்தை

பிறந்த பெண் சிசுவை மண்ணில் புதைத்து சென்ற கொடூர தாய்

Published On 2019-09-10 06:18 GMT   |   Update On 2019-09-10 06:18 GMT
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பிறந்த பச்சிளங்குழந்தையை மண்ணில் புதைத்து சென்ற தாய் யார் என போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை எதிர்புறம் ஒரு டீக்கடை கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களாக மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக செங்கல், மணல் உள்ளிட்ட தளவாட பொருட்கள் கடைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அங்கிருந்த மணலை அள்ளினர். அப்போது மணலுக்குள் பிறந்த சில மணிநேரங்களே ஆன பெண் சிசு புதைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொப்புள் கொடி அகற்றப்படாமல் குறை பிரசவத்தில் அந்த பெண் குழந்தை பிறந்திருக்கலாம். இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும், அந்த குழந்தையை மண்ணில் புதைத்து சென்றது யார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தவறான வழியில் பிறந்த குழந்தையை புதைக்க இடம் தெரியாமல் அங்கிருந்த மணலில் யாரேனும் புதைத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேக்கிக்கின்றனர்.

தொழிலாளர்கள் உரிய நேரத்தில் பார்த்ததால் குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. இல்லையெனில் தெரு நாய்கள் அதன் உடலை கவ்வி வேறு பகுதிக்கு இழுத்து சென்றிருக்ககூடும். எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பஸ் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News