செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையம்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2019-09-09 09:57 GMT   |   Update On 2019-09-09 09:57 GMT
கோயம்பேடு பஸ்நிலையத்தில் தூங்குவதுபோல் நடித்து பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போரூர்:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் வெளியூர் பயணி ஒருவர் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அவரது அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்து இருந்தார். போலீசை கண்டதும் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்த போது 4 செல்போன்கள் இருந்தது.

அவன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பதும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் அசந்து தூங்கும் வெளியூர் பயணிகளை குறி வைத்து அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டும், தூங்குவது போல நடித்தும் செல்போன், மணிபர்சை திருடி வந்தது தெரியவந்தது.

கணபதியை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மாதவரம் மில்க் காலனி சி.கே.எம். நகரைச் சேர்ந்தவர் ஆதித்யா. கேட்டரிங் கல்லூரி மாணவர். இவர் அரும்பாக்கம் 100அடி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். பின்னர் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென ஆதித்யாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி ஓடினார்.

அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் எம்.எம். டி.ஏ. காலனி சத்யா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (55) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News