செய்திகள்
கடத்தல்

திருவண்ணாமலையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்- 4 பேர் சிக்கினர்

Published On 2019-09-02 13:35 GMT   |   Update On 2019-09-02 13:35 GMT
திருவண்ணாமலையில் வாலிபரை வெட்டி காரில் கடத்திய 4 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை டவுனை சேர்ந்தவர் கவுரிசங்கர் இவரிடம் செய்யாறு சுருட்டல் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் பொக்லைன் எந்திரம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். கவுரிசங்கர் திருவண்ணாமலையில் ஒரு எந்திரத்தை காட்டி விலையும் பேசினார்.

இதற்காக மோகன்ராஜ் ரூ.3 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வாங்கும் முடிவை கைவிட்டார்.

கவுரிசங்கரிடம் கொடுத்த முன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மோகன்ராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அவர்கள் செங்கம் ரோட்டில் பைக்கில் நின்று கொண்டிருந்த கவுரிசங்கரிடம் பணத்தை கேட்டனர். அவர் தரமறுத்ததால் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மோகன்ராஜ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கவுரிசங்கரை தாக்கினர். அவர்கள் கவுரிசங்கரை கத்தியால் வெட்டி காரில் கடத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கவுரிசங்கரை கடத்தி சென்ற காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் காரின் எண் போலியானது என தெரியவந்தது.

பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவரை வெட்டி காரில் கடத்தி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. தூசி மெயின் ரோட்டில் நடந்த சோதனையில் திருவண்ணா மலையில் இருந்து கவுரி சங்கரை வெட்டி கடத்தி வந்த காரை மடக்கி பிடித்தனர்.

கவுரிசங்கரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை கடத்தி வந்த 4 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News