search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth kidnapped"

    பெரம்பூர் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் கடத்தப்பட்டார். அவரை மீட்ட போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை பெரவள்ளூரை சேர்ந்தவர் பானுமதி (வயது 40). இவருக்கு குழந்தை இல்லாததால் தனது அக்கா மகன் பிரசாந்த் (20) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக தெரிகிறது. பானுமதியின் கணவர் சிவகுமார், 2020-ம் ஆண்டு வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் கடன் வாங்கி வீட்டில் வைத்து இருந்தார்.

    அதில் ரூ.20 லட்சம் திருடு போனது. இதில் பானுமதிக்கு பிரசாந்த் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரசாந்த் சரியான விளக்கம் கொடுக்காததால் பானுமதி தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரிடம் கூறினார்.

    இந்தநிலையில் கார்த்திக், தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று காலை பெரம்பூர் அடுத்த அகரம் சந்திப்பில் இருந்த பிரசாந்தை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றார். அம்பத்தூர் அருகே செல்லும்போது பிரசாந்த் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தன்னை கடத்திச்செல்வதாக கூச்சலிட்டார்.

    உடனே அங்கிருந்த போலீசார், பிரசாந்த் உள்பட 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரையும் மடக்கி பிடித்து பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் வாலிபரை கடத்தியதாக மாதவரத்தை சேர்ந்த விக்னேஷ் (24), அம்பத்தூரை சேர்ந்த வசந்த் (27), தேனியை சேர்ந்த முகமது அனாஸ் (25) மற்றும் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆதித்யா (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூரில், வாலிபரை கடத்தி சென்று ரூ.15 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). கடந்த 29-ந் தேதி ராஜேஷ் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் முனியப்பனின் செல்போனுக்கு மர்ம வாலிபர் பேசினார். அப்போது ராஜேசை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த முனியப்பன் இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடத்தல் கும்பல் ராஜேசை திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் சிறை வைத்து இருந்தனர். அவரிடம் இருந்த வங்கி டெபிட் கார்டை பறித்த கும்பல் அதன் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு ராஜேசை விடுவித்து விட்டனர்.

    இதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் பணம் பெற்று அரசு பஸ் மூலம் உத்திரமேரூர் வந்து சேர்ந்தார். இதுபற்றி உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராஜேசிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் கடத்தலில் ஈடுபட்டது சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வீரமுத்து, ஒலையூரை சேர்ந்த மகரஜோதி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் கூட்டாளிகள் மல்லிகாபுரம் சுதீஷ், நெல்வாய் பிரகாஷ், சின்ன மாங்குளம் புருசோத்தமன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
    ×