நாகர்கோவிலில் கஞ்சா, லாட்டரி விற்ற 2 பேர் கைது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா விற்பவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.
மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கஞ்சா வியாபாரிகள் மற்றும் லாட்டரிச்சீட்டு விற்பவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒழுகினசேரி பகுதியில் வரும் போது அங்கு சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக் பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற் கொண்டனர். அதில் அவர் வடசேரி பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 33) என்பது தெரியவந்தது.
மேலும் சதீசை சோதனை செய்த போது அவர் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டார் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈபட்டிருந்தனர். அவர்கள் அரசமூடு சந்திப்பில் சோதனை மேற் கொண்டபோது அதே பகுதியை சேர்ந்த சிவன் (வயது 31). லாட்டரிச்சீட்டு விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லாட்டரிச்சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.