செய்திகள்
108 ஆம்புலன்ஸ்

பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்

Published On 2019-08-29 13:10 GMT   |   Update On 2019-08-29 13:10 GMT
பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் குடிக்காடு கிராத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 35). இவரது மனைவி தேன்மொழி (27). விவசாயிகளான இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ரித்திஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தேன்மொழி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பமாக இருந்த தேன்மொழிக்கு இன்று இரவு திடீரென பிர சவவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராமலிங்கம் உள்ளிட்ட அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பெருமத்தூர் கிராமத்திற்கு சென்ற 108 ஆம்புலன்சு ஊழியர்கள் பிரசவ வலியால் துடித்த தேன்மொழியை ஏற்றிக் கொண்டு, திருமாந்துறை வழியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தேன்மொழிக்கு வலி அதிகரித்ததால், டோல் பிளாசா பகுதியில் அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் சந்திரசேகரன் மற்றும் ஓட்டுனர் சுகுமாரன் ஆகியோர் தேன்மொழிக்கு உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை உதவி அளித்தனர். இதில் தேன்மொழிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து தாயையும், சேயையும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பத்திரமாக  காப்பாற்றி தொடர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். துரிதமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் தேன்மொழியின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள், பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News