செய்திகள்
பலியான மாணவர் ஷா நவாஸ்.

சேலத்தில் கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

Published On 2019-08-23 13:07 GMT   |   Update On 2019-08-23 13:07 GMT
சேலத்தில் இன்று கிணற்றில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட பிளஸ் 1 மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம்:

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லியாகத்அலி, ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மூத்த மகன் ஷாநவாஸ் (வயது 15). இவர் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் விடுமுறை நாட்களில் தனது நண்பர்கள் முகமது ரியாஸ், தவுபிக் அகமது, தீபக் ஆகியோருடன் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றுக்கு நீச்சல் பயிற்சிக்காக செல்வது வழக்கம். அதேபோல் இன்றும் பள்ளி விடுமுறை என்பதால் ஷாநவாஸ் தனது நண்பர்கள் 3 பேருடன் கிணற்றுக்கு வந்தார்.

சேலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஷாநவாஸ் மற்றும் நண்பர்கள் கிணற்றில் இறங்கி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஷாநவாஸ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஷாநவாசை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் ஷாநவாஸ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி நண்பர்கள் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்களிடம் கூறினார்கள். உடனே அவர்களும் அங்கு ஓடிவந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பள்ளப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி ஷாநவாஸ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது காதில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது தாய் வவுஷியா அங்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் ஷாநவாஸ் உடல் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாநவாஸ் இறந்தது எப்படி? ஏன்பது குறித்தும் நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News