மனைவியுடன் தகராறு: மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை
ராஜபாளையம்:
ராஜபாளையம் வீர தர்மாபுரம் தெருவைச் சோந்தவர் செல்வம் (வயது 27) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராதிகா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வம் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் ராதிகா மிகவும் கஷ்டப்பட்டார்.
குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்லுமாறு கணவரிடம் கூறினார். ஆனால் செல்வம் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த செல்வம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் ராதிகா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.