செய்திகள்
உடல் உறுப்பு தானம்

விபத்தில் மூளைச்சாவு - கூலித் தொழிலாளி உடல் உறுப்பு தானம்

Published On 2019-08-20 10:16 GMT   |   Update On 2019-08-20 10:16 GMT
கும்மிடிப்பூண்டி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல்சூளைமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது62). கூலித் தொழிலாளி. கடந்த 17-ந் தேதி இரவு சுண்ணாம் புகுளம் கிராமத்தில் இருந்து தனது மனைவி பாண்டம்மாளுடன் (50) ஆறுமுகம் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

செங்கல்சூளைமேடு கிராமத்தின் சாலை திருப்பத்தில் மோட்டார்சைக்கிள் திரும்பும்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள், ஆறுமுகம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆறுமுகமும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம், கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.

இந்த நிலையில், அவரது உறவினர்களின் முழு சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. மூளைச்சாவு அடைந்த ஆறுமுகத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வு என மொத்தம் 4 உறுப்புகளை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினர், அரசு விதி முறைப்படி பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு பொருத்த தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News