செய்திகள்
கைது

சுவாமிமலை அருகே முதியவர் கொலையில் 2 வாலிபர்கள் கைது

Published On 2019-08-20 08:36 GMT   |   Update On 2019-08-20 08:36 GMT
சுவாமிமலை அருகே முதியவர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே இன்னம்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது66), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் ராமச்சந்திரன் (44). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கட்ட பிரகாஷ் (19) மற்றும் செர்லாக் பிரகாஷ் (20) ஆகியோர் ரத்தினத்தின் பேத்திகளை கேலி- கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கட்ட பிரகாஷ், செர்லாக் பிரகாஷ் ஆகியோர் ரத்தினம் வீட்டு முன்பு நின்று கொண்டு பேசினர். அப்போது அங்கு வந்த ரத்தினம், அந்த வாலிபர்களை தட்டி கேட்டார்.

இதைக்கேட்ட 2 வாலிபர்களும் கடும் ஆத்திரம் அடைந்தனர். உடனே முதியவர் ரத்தினத்தை திடீரென தாக்கினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுவாமிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதியவர் ரத்தினத்தை கொலை செய்த கட்ட பிரகாஷ், செர்லாக் பிரகாஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News