செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல் உடைக்கபட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

உளுந்தூர்பேட்டை அருகே அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொள்ளை

Published On 2019-08-19 13:27 GMT   |   Update On 2019-08-19 13:27 GMT
உளுந்தூர்பேட்டை அருகே அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் சமீபத்தில் தேர்த்திருவிழா நடந்து முடிந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

அதனை தொடர்ந்து உண்டியல் சீல்வைக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கதவு பூட்டப்பட்டது.

நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் ஏறி குதித்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை கோவில் அர்ச்சகர் பிச்சமணி மற்றும் காவலாளிகள் கோவிலை திறந்தனர். அப்போது உண்டியல் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்த பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து எலவனாசூர் கோட்டை போலீசில் அர்ச்சகர் பிச்சமணி புகார் செய்தார். கோவிலில் கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News