திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - வாலிபர் பலி
திசையன்விளை:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள மூலவிளையை சேர்ந்த தாசன் மகன் மெர்லின் (வயது21). கட்டிட தொழிலாளி. குமரி மாவட்டம் அழகிய மண்டபத்தை சேர்ந்தவர் துரை (40). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது திசையன்விளை காமராஜர் நகரை சேர்ந்த சதீஷ், சுடலைமணி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் திசையன்விளை- உடன்குடி ரோடு முருகேசபுரம் விலக்கில் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர் எதிரே மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் காயம் அடைந்தனர். இதில் மெர்லின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
துரை பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சதீஷ், சுடலைமணி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.