ஆலாந்துறை அருகே வன அதிகாரியை தாக்கிய மாணவர் கைது
கோவை:
கோவை அருகே உள்ள மத்தவராயபுரத்தை சேர்ந்தவர் சோழமன்னன் (வயது43). இவர் மதுக்கரை வனச்சரக அதிகாரியாக உள்ளார்.
சம்பவத்தன்று இவர் ரோந்து சென்றபோது தடை செய்யப்பட்ட வனப்பகுதியான மூங்கில் மடை குட்டை பகுதியில் சில வாலிபர்கள் குளித்துக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்த சோழமன்னன் வனத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர் வன அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
பின்னர் வன அதிகாரி சோழமன்னன் இது குறித்து காருண்யா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வன அதிகாரியை தாக்கிய வாலிபரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆலாந்துறையை சேர்ந்த அன்பு என்கிற அருள் குமார் (23) என்பதும், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.