மதுரை அருகே குடும்பத்தோடு குற்றாலம் சென்ற தந்தை-மகன் வீடுகளை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பூதக்குடி. இங்குள்ள முள்ளமலை நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது64). இவரது மகன் ராமச்சந்திரன் (59).
2 பேரும் ஒரே வீட்டில் தரை தளம் மற்றும் மாடியில் குடியிருந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குற்றாலம் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அவர்களது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த நசீர்பானு என்பவர் செல்போனில் பரமசிவம் மற்றும் ராமச்சந்திரனிடம் தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்பினர்.
வீட்டில் வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. பொருட்கள் சிதறி கிடந்தன. பரமசிவம் வீட்டில் 19 பவுன் நகையும், ராமச்சந்திரன் வீட்டில் 6 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.