செய்திகள்
திருக்குறுங்குடி அருகே டிராக்டர் மீது பைக் மோதி விவசாயி பலி
திருக்குறுங்குடி அருகே டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் மைக்கேல் பூபதி (வயது 64), விவசாயி. இவர் கடந்த 3-ந் தேதி வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றார். மாலையில் அங்கிருந்து பைக்கில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திருக்குறுங்குடி அருகே ராஜபுதூரில் வந்தபோது அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் மைக்கேல் பூபதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி அவரது மகன் புரோலின் (29) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.
திருக்குறுங்குடி போலீசார் இதுதொடர்பாக டிராக்டரின் உரிமையாளரான ராஜபுதூரை சேர்ந்த லட்சுமணன் மகன் சண்முகதுரை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.