வத்தலக்குண்டுவில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 4 பேர் கைது
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வுக்கு சென்று அதனை பறிமுதல் செய்தாலும் மீண்டும் விற்பனை நடைபெற்று வந்தது.
குறிப்பாக பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், கலையரசன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் வத்தலக்குண்டு தெற்குதெருவை சேர்ந்த காமாட்சிஆனந்த்(29), விராலிப்பட்டியை சேரந்த காட்டுராஜா(42), பீலிஸ்புரம் பகுதியை சேர்ந்த முகமதுமரைக்கான்(51), பிச்சை(46) ஆகியோர் கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 27 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர்.