செய்திகள்
ஆறுமுகநேரி அருகே பணம் கேட்டு அரிவாளைகாட்டி மிரட்டல்- வாலிபர் கைது
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் பணம் கேட்டு அரிவாளைகாட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆறுமுகநேரி:
ஏரல் டபுள்ரோஸ் காலனியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் மகன் ஜெபஸ்டன் விஜய்(வயது 22). இவர் சம்பவத்தன்று பழையகாயல் அருகே மஞ்சள்நீர் காயல் விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழையகாயல் காமராஜபுரத்தை சேர்ந்த ஏசுராஜ் மகன் பூரன சுரேஷ்(வயது 38) என்பவர் ஜெபஸ்டனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து உதவிக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் பூரன சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பூரன சுரேஷை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.