செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சாம்பல்
கிருமாம்பாக்கம் அருகே திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சாம்பலானது. ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே ஆலடிமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). விவசாயி. இவரது மனைவி சங்கீதா, இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டின் பின்னால் உள்ள மற்றொரு கூரை வீட்டில் சங்கீதாவின் மாமியார் குமாரி வசித்து வந்தார்.
நேற்று மாலை சங்கீதா வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டின் கூரையில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமள வென கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் குமாரி வசித்து வந்த வீட்டிலும் தீ பரவியது. உடல் ஊனமுற்றவரான குமாரியை அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்து மீட்டனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், இயலாததால் இது பற்றி பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து போனதால் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் வைத்து இருந்த நெல் மூட்டைகள் மற்றும் மணிலா, எள், உளுந்து மூட்டைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்க பணம், தங்க நகைகளும் எரிந்து போனது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் கந்தசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவிகளை வழங்கினார்.