என் மலர்
நீங்கள் தேடியது "house fire"
- ஒரே ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.
- வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.
லாகூர்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூர் நகரில் இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.
தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து பற்றி விரிவான விசாரணை நடத்த பஞ்சாப் இடைக்கால முதல்வர் மோஷின் நக்வி உத்தரவிட்டிருக்கிறார்.
- ராமனின் பேரக்குழந்தைகள் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர்.
- சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 65). இவரது ஓட்டு வீடு மறவமங்கலம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புக்கு பின்புறம் உள்ளது.
நேற்று ராமனின் பேரக்குழந்தைகள் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென டி.வி. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே தீப்பிடித்து பரவ தொடங்கியது.
இதை பார்த்ததும் வீட்டில் இருந்த குழந்தைகள் அலறியபடி வெளியே ஓடி வந்தார்கள்.
சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. அக்கம்பக்கத்தினர் முயன்றும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், சிவகங்கை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த நிறைய பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துவிட்டன.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. வெடித்து வீடு தீயில் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பு.புளியம்பட்டி:
பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம் பாளையம் கற்பூர காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமாரி (32), சாந்தாமணி (40), பத்மாவதி (40) இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய தோட்ட வேலைக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் முத்துக்குமாரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரி வீட்டில் உள்ள வீட்டுச் சாமான்கள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் சாந்தாமணி வீட்டில் இருந்த மற்ற கட்டில், பீரோ மற்றும் ஒரு வெள்ளாடு, மொபட், பத்மாவதி வீட்டில் இருந்த வீட்டுச் சாமான்கள், அரை பவுன் தங்க கம்மல், பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.
இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம் கிராபோர்ட், தனது பாசத்துக்குரிய நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார்.
உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை. நாயின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.
மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.
வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






