ஒரத்தநாடு அருகே பெண் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர் கைது
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு போலீஸ் சரகம் திருமங்கலக்கோட்டை மேலையூர் மாதவன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி வில்லம்மாள்(வயது30). இருவரும் விவசாய கூலித் தொழிலாளிகள்.
குடும்பத் தேவைக்காக திருமங்கலக்கோட்டை கீழையூர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரிடம் வில்லம்மாள் பணம் கடன் வாங்கியிருந்தாராம். சம்பவத்தன்று பெருமாள் பணத்தை திருப்பி கேட்டபோது வங்கியில் இருந்து எடுத்து தருவதாக கூறியதால் பெருமாள் அவரை தனது மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் வில்லம்மாளை மோட்டார் சைக்கிளிலேயே மாதவன்குடிகாட்டிற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த அறிவுசெல்வன், ராமையன், செந்தில் ஆகிய 3 பேரும், வில்லம்மாளிடம் நீ எப்படி பெருமாளுடன் மோட்டார் சைக்கிளில் வரலாம் என்று கேட்டு 2 பேரையும் தாக்கியுள்ளனர்.
அப்போது பெருமாள் அங்கிருந்து சென்று விட்டாராம். இதில் காயமடைந்த வில்லம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அவர் பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து ராமையனை கைது செய்தார். மற்ற 2 பேரையும் தேடிவருகிறார்.