செய்திகள்
பெண் எரித்துக்கொலை (கோப்புபடம்)

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் பெண் எரித்துக்கொலை? கணவருக்கு வலை வீச்சு

Published On 2019-08-08 14:33 GMT   |   Update On 2019-08-08 14:33 GMT
திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் பெண்ணை அவரது கணவரே எரித்துக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு ராமலெட்சுமி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). பெயிண்டிங் காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி அமுதா (வயது 44). இவர்களுக்கு பிரேமலதா (26), தமிழ்செல்வி (24) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். பிரேமலதாவுக்கு திருமணம் ஆகி அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

தமிழ்செல்வி சென்னையில் படித்து வருகிறார். கணேசனுக்கு வேறு பெண்களுடன் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அமுதா அடிக்கடி கோவிலுக்கு சென்று வந்துள்ளார்.

நேற்று மாலையில் அமுதா வீட்டில் இருந்து புகை வெளி வந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது அமுதா தீயில் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

உடனே ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அமுதாவின் மகள்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பின் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அமுதாவை கொண்டு சென்றனர். ஆனால் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்பதால் மீண்டும் திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அமுதா உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பு அமுதா போலீசில் தெரிவிக்கையில், எனக்கும் எனது கணவருக்கும் நேற்று ஏற்பட்ட தகராறில் பெயிண்ட்டுடன் கலப்பதற்கு பயன்படுத்தும் தின்னரை என் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அவர் வெளியே சென்று விட்டார். பின்னர் வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என்றார்.

இது குறித்து அமுதா அளித்த வாக்குமூலத்தின் பேரில் தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கணவர் கணேசன் தலைமறைவாகி விட்டதால் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News