செய்திகள்
ரேஷன் அரிசி

குளச்சல் அருகே கடை முன்பு பதுக்கிய 2½ டன் ரேசன் அரிசி பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

Published On 2019-08-08 14:12 GMT   |   Update On 2019-08-08 14:12 GMT
குளச்சல் அருகே கடை முன்பு பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேசன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல்:

குமரி மாவட்டத்தில் இருந்து ரேசன் பொருள்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட பறக்கும் படை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் சதானந்தன், தனித்துணை தாசில்தார் அருள் லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் மற்றும் டேவிட் ஆகியோர் கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குளச்சலை அடுத்த கோடிமுனை கடற்கரை கிராமத்தில் நேற்று மாலை பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர்.

கோடி முனை கடற்கரை கிராமத்திற்கு சென்ற போது அங்குள்ள ஒரு ரேசன் கடை முன்பு ஏராளமான மூடைகள் அனாதையாக கிடந்தன. அவற்றை சோதித்து பார்த்த போது அதில் ரேசன் அரசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 2½ டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் உடையார் விளையில் உள்ள அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை அங்கு பதுக்கி வைத்தது யார்? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News