செய்திகள்
கொலை செய்யப்பட்ட தர்மலிங்கம்

காதல் திருமண விவகாரத்தில் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் கடத்தி கொலை

Published On 2019-08-05 11:27 GMT   |   Update On 2019-08-05 11:27 GMT
பென்னாகரம் அருகே அரசு பஸ் கண்டக்டரை கடத்தி கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பிக்கம்பட்டி அருகே உள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 40). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக இருந்தார். இவரது மனைவி கவிதா. இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 2-ந் தேதி காலை பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் வழியில் மடம் ஏரி அருகே தர்மலிங்கம் கழுத்து மற்றும் கை-காலில் காயங்களுடனும் கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு 7.45 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதல் திருமண விவகாரத்தில் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் செய்து உள்ளனர்.

தர்மலிங்கத்தின் உறவுக்கார பெண் பிரியாவை இன்னொரு சமூகத்தை சேர்ந்த அஜீத்குமார் என்ற வாலிபர் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில்தான் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி கவிதா போலீசில் புகார் செய்து உள்ளார்.

கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், 5 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களது கோரிக்கையை ஏற்றால்தான் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என்றும், அப்படி கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிணத்தை வாங்கமாட்டோம் என்றும் கவிதா கூறினார்.

Tags:    

Similar News