செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலதிபர் வேகத்தடையில் மோதி பலி
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலதிபர் வேகத்தடையில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, சேலம் ரோடு பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் மகன் குணசேகரன் (வயது 34). இவர், கிருஷ்ணகிரியில் சைக்கிள் ஏஜென்சி கடை நடத்தி வருகிறார். குணசேகரன் நேற்று இரவு கிருஷ்ணகிரி புதிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஓட்டி சென்ற பைக்கில் சைடு ஸ்டாண்டினை எடுத்து விடாமல் சென்றுள்ளார்.
அப்போது கிருஷ்ணகிரி- பெங்களூர் ரோட்டில் உள்ள மாவட்ட வனச்சரக அலுவலகம் முன்பு செல்லும் போது அங்கிருந்த வேகத்தடையில் சைடு ஸ்டாண்டு தட்டி, குணசேகரன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் படுகாயத்துடன் குணசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், குணசேகரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.