செய்திகள்
கைது

விவசாயியை அடித்து கொன்று கிணற்றில் வீச்சு: நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2019-08-02 15:10 GMT   |   Update On 2019-08-02 15:10 GMT
கிருஷ்ணகிரி அருகே விவசாயியை அடித்து கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி அருகே உள்ள பூதிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(42). விவசாயியான இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கல்லால் தாக்கி கொலை செய்தது. பின்னர் இவரது உடலில் கல்லை கட்டி உடலை கங்கலேரி அருகில் உள்ள வட்டிகானப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் வீசி சென்றனர். 

இந்த கொலை குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் கொலை நடப்பதற்கு முன்பாக அவர் கையில் ரூ.50 ஆயிரம் வரை வைத்திருந்ததும், அவரிடம் இருந்து அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே மர்ம நபர்கள் அவரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி வீசி சென்றதும் தெரியவந்துள்ளது. 

இந்த கொலை குறித்து சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராமனின் நண்பர்களான பூதிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (28), ராமர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சரவணன் (43) ஆகிய 2 பேரும் அவரை சம்பவத்தன்று அழைத்து கொண்டு மது குடிக்க சென்றுள்ளனர். அப்போது அவரிடம் ரூ.50 ஆயிரம் இருந்தது 2 பேருக்கும் தெரியவந்தது. ராமனை அடித்து போட்டுவிட்டு அந்த பணத்தை 2 பேரும் பங்கு பிரித்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது 2 பேருக்கும் மதுபோதை அதிகமானதால் ராமனிடம் இருந்து பணத்தை பறிக்க அவரை அடித்து கொன்றுவிட்டு கல்லை கட்டி அதேபகுதியில் உள்ள கிணற்றில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சரவணனையும், பெருமாளையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News