மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம்:
பல்லடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (26). இவர் திருப்பூரில் உள்ள செல்போன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி துர்கா(24).
மகேந்திரனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகேந்திரன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் பின்பு துர்கா அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார். இந்த நிலையில் மனைவி திட்டியதால் மன வேதனை அடைந்த மகேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். கடைக்கு சென்று விட்டு வந்த துர்கா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்து சத்தம்போட்டார்.
அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மகேந்திரனை மீட்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.