கரூர் அருகே கத்தியால் குத்தி இளம்பெண்ணை கொலை
கரூர்:
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள ராக்கியம்கவுண்டன்வலசுவில் நேற்று காலை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தென்னிலை கிராமநிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து அவர் தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் மர்ம நபர்கள் அவரை கொலைசெய்து சாலையோரத்தில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர், ஊர் விவரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடையாளம் காண்பதற்காக அந்த பெண்ணின் புகைப்படம் காவல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாயமான பெண்கள் விவரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் மற்றும் அவரை கொலை செய்த கொலை யாளிகள் யாரென்றும் விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று கரூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பதை அறிவதற்காக உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் முடிவில் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணங்கள் தெரியவரும்.