வில்லியனூரில் மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி
வில்லியனூர்:
வில்லியனூர் கோட்டை மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் புதுவையில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று மாலை கோட்டை மேடு பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அப்போது பிரவீன் வீட்டின் அருகே உயர் மின் அழுத்த கம்பியில் படர்ந்திருந்த மரக்கிளையை வெட்ட முயன்றார். அந்த நேரத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதால் பிரவீனை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கண்டமங்கலம் அருகே கொங்கம்பட்டு காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை (64). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் எல்லைப்பிள்ளை சாவடி 100 அடி ரோட்டில் ஒரு பழைய வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது துரை சுத்தியலால் சுவரில் ஓட்டை போட்டபோது சுவரில் பதித்து இருந்த மின் வயர் சுத்தியலில் உரசியதால் துரையை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து துரையின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரில் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.